46-க்கு ஆல் அவுட்-ஐ விடுங்க.. 2012-க்கு பின் முதல் தடவ.. இந்த விஷயம் தெரியுமா?

இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பல்வேறு காரணங்களால் இந்திய அணிக்கு தேவையற்ற சம்பவங்களை ஏற்படுத்தி வருகிறது. முதல்நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது நாளில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 50 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதைத் தொடர்ந்து பேட் செய்த நியூசிலாந்து அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, கடைசியில் களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா மற்றும் டிம் சௌதி ஆகியோரும் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு கடினமான நேரத்தை வழங்கினர். ரச்சின் ரவீந்திரா சதம் அடிக்க, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் இந்தியாவை விட 200 ரன்களுக்கும் மேல் முன்னணி பிடித்தது.

2012 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்த அணிகள் 200-க்கும் அதிக ரன்களை முன்னிலை பெறுவது இதுவே முதல் முறை ஆகும். கடைசியாக 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியா வந்திருந்த போது, இந்தியாவை விட 200-க்கும் அதிக ரன்களை முன்னிலை பெற்றது. மேலும், அந்த போட்டியிலும் வெற்றி பெற்று அசத்தியது.

இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றில் முதலில் பேட் செய்தும், எதிரணி 200-க்கும் அதிக ரன்களை முன்னிலை பெற்றது இதுவே நான்காவது முறை ஆகும். முன்னதாக 2008 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 418 ரன்களையும், அகமதாபாத்தில் 2009 ஆம் ஆண்டு இலங்கை அணி 334 ரன்களையும், 2012 ஆம் ஆண்டு ஈடன் கார்டன்ஸில் இங்கிலாந்து அணி 207 ரன்களையும் அடித்து இருந்தன.

நடப்பு டெஸ்ட் போட்டியை பொருத்தவரை இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்களை குவித்து இருக்கிறது. இந்திய அணியின் ஜெய்ஸ்வால் 35 ரன்கள், ரோகித் 52 ரன்கள், விராட் கோலி 52 ரன்கள், சர்ஃபராஸ் கான் 70 ரன்கள் அடித்தனர். இதில் சர்ஃபராஸ் கான் அவுட் ஆகாமல் களத்தில் உள்ளார்.

Leave a Comment