சட்டச்சபையில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள்… குண்டுக்கட்டாக வெளியேற்ற உத்தரவு

சட்டப்பேரவையின் இரண்டாவது நாளான இன்று அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக அவை காவலர்கள் கொண்டு வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டு இருக்கிறார்.

கள்ளச்சாராயம் குடித்து 49 பேர் உயிரிழந்து இருக்கும் நிலையில், பலர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சையில் இருக்கின்றனர். இதுகுறித்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அதிமுக உறுப்பினர்களை அவைக்காவலர்கள் கொண்டு உடனே வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, அவர்களை காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர். இதுகுறித்து,  சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த அமைச்சர் துரைமுருகன் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையானதை செய்தும் வருகிறது. சட்டப்பேரவையில் கேள்வி நேரம் என்பதே முக்கியமானது.

அந்த நேரத்தில் வேறு விஷயங்களை விவாதத்தில் எடுக்க முடியாது. இதனால் தவிர்க்க முடியாத காரணத்தால் தான் அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். முன்னாள் முதல்வராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. அவருக்கும் சட்டம் தெரியும். கள்ளச்சாராய விவகாரம் குறித்து அனைவரும் பேசலாம். அனைத்து கட்சியினரும் விவாதிக்கலாம். இதை பற்றி பேச அனைவருக்கும் உரிமை உண்டு எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Leave a Comment