டெலிகிராம் CEO-வை சுத்துப்போட்ட போலீஸ்.. அதிரடி கைது.. நிறுவனம் அளித்த அப்டேட்..!

உலகளவில் பிரபல குறுந்தகவல் மற்றும் தகவல் பரிமாற்ற செயலியாக டெலிகிராம் விளங்குகிறது. இதன் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ்-வை பிரான்ஸ் போலீசார் விமான நிலையத்தில் வைத்து கைது செய்த சம்பவம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டதற்கு உலக பணக்காரர்களில் ஒருவரும், கருத்து சுதந்திரத்தின் முக்கியத்துவம் பற்றி அதிகம் பேசுபவராக அறியப்படும் எலான் மஸ்க் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த எக்ஸ் தள பதிவில் எலான் மஸ்க், “பாயிண்ட் ஆஃப் வியூ: 2030 ஆம் ஆண்டு நீங்கள் ஐரோப்பாவில் உள்ளீர்கள், குறிப்பிட்ட மீமை லைக் செய்ததற்காக நீங்கள் கொல்லப்படுகிறீர்கள்,” என்று குறிப்பிட்டார்.

பிரான்ஸ் நாட்டின் லி போர்கெட் விமான நிலையத்தில் வைத்து பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து டெலிகிராம் வெளியிட்ட பதிவில், “சமீபத்திய டிஜிட்டல் சேவைகள் சட்டம் உள்பட ஐரோப்பிய யூனியன் சட்ட விதிகளை டெலிகிராம் பின்பற்றி வருகிறது – தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி இருக்கும் விதிகளுக்கு ஏற்ப டெலிகிராம் செயல்படுகிறது. மேலும் தொடர்ந்து தனது சேவைகளை மேம்படுத்தியும் வருகிறது.”

“டெலிகிராம் சிஇஓ பாவெல் துரோவ்-இடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை. அவர் அடிக்கடி ஐரோப்பாவில் பயணம் மேற்கொண்டு தான் வருகிறார். ஒரு தளம் தவறாக பயன்படுத்தப்படுவதற்கு அதன் உரிமையாளரை குற்றம்சாட்டுவது அபத்தமாக இருக்கிறது.”

“உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் தகவல் பரிமாற்றத்திற்கும், நம்பத்தகுந்த தகவல்களை பெறுவதற்கும் டெலிகிராம் சேவையை பயன்படுத்தி வருகிறோம். இந்த சூழ்நிலைக்கு சரியான தீர்வை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். உங்கள் அனைவருடன் டெலிகிராம் இருக்கிறது,” என குறிப்பிட்டுள்ளது.

Leave a Comment