Cricket
92 ஆண்டுகளில் முதல் இந்திய வீரர்.. ஜெய்ஸ்வாலின் சூப்பர் சாதனை..!
வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்ற குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய வீரர்களில் ஒருவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இளம் இந்திய வீரரான ஜெய்ஸ்வால் இரண்டு டெஸ்ட் போட்டிகளின் நான்கு இன்னிங்ஸில் மூன்று அரைசதங்களை விளாசியுள்ளார்.
அதுவும், மழை காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டி பாதிக்கும் சூழல் உருவான நேரத்தில், இந்திய அணிக்கு தேவையான ரன்களை அதிரடியாக அடித்து அசத்தினார். மேலும், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி வெற்றி இலக்கை துரத்தும் வேளையில், அற்புதமாக அரைசதம் கடந்து வெற்றியை உறுதிப்படுத்தினார். போட்டியில் தனது அணிக்கு சாதகமான முடிவு கிடைக்கச் செய்யும் வகையில் ஆடியதோடு, குறிப்பிடத்தக்க சாதனைகளை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
- இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் விளாசிய முதல் இந்திய துவக்க வீரர் என்ற சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
- உள்நாட்டு போட்டிகளில் இந்திய வீரர் ஒரே ஆண்டில் அதிகபட்ச அரைசதங்களை அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். நடப்பு ஆண்டில் மட்டும் ஜெய்ஸ்வால் எட்டு அரைசதங்களை விளாசியுள்ளார். முன்னதாக குண்டப்பா விஸ்வநாத் (1979), விரேந்திர சேவாக் (2010), சத்தேஷ்வர் புஜாரா (2016), கே.எல். ராகுல் (2017) ஆகியோர் ஒரே ஆண்டில் அதிகபட்சம் ஏழு அரைசதங்களை விளாசியுள்ளனர்.
- இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில், ஜெய்ஸ்வால் பென் ஸ்டோக்ஸ் சாதனையை முறியடித்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரே எடிஷனில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வால் முதலிடம் பிடித்துள்ளார். நடப்பு 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஜெய்ஸ்வால் இதுவரை 32 சிக்சர்களை விளாசியுள்ளார்.
- முன்னதாக 2019-21 தொடரில் பென் ஸ்டோக்ஸ் 31 சிக்சர்களை அடித்தது, சாதனையாக இருந்தது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் தொடரின் ஒரு சீசனில் 30-க்கும் மேற்பட்ட சிக்சர்களை அடித்த இரண்டு வீரர்கள் பட்டியலில் ஸ்டோக்ஸ் மற்றும் ஜெய்ஸ்வால் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
Cricket
293 டெஸ்ட் போட்டிகளில் 24 முறை தான்.. புது வரலாறு படைத்த இந்தியா-வங்கதேசம்
கான்பூரில் நடைபெற்ற இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், முதலாவது டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணி உள்நாட்டில் நடைபெற்ற 18 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி அசத்தியுள்ளது. கடைசியாக எம்.எஸ். டோனி தலைமையிலான இந்திய அணி 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தோல்வியுற்றது. அதன்பிறகு இந்திய அணி விளையாடிய டெஸ்ட் தொடர்கள் அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் டாஸ் வென்ற அணி அனைத்து போட்டிகளிலும் பந்துவீச்சை தேர்வு செய்தது இதுவே முதல் முறை ஆகும். இந்தியாவில் விளையாடப்பட்ட 293 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 24 போட்டிகளில் தான் ஒரு அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் முதன் முறையாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே கடந்த 1933 ஆம் ஆண்டு நடைபெற்றது.
இந்தியா வங்கதேசம் தொடரின் மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் உள்ளது. அதாவது இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அணிகள் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சு தேர்வு செய்த சம்பவங்கள் எதுவும் இந்த மைதானங்களில் நடைபெறவில்லை. முன்னதாக கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் (6), மும்பை வான்கடே மைதானம் (5) மற்றும் மொகாலியில் உள்ள பிசிஏ மைதானம் (5) மைதனங்களில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்துள்ளன.
சமீபத்திய டெஸ்ட் போட்டிகள் எதுவும் இந்த மூன்று மைதானங்களில் நடைபெறவில்லை. மேலும், இந்தத் தொடர் நடைபெற்ற சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் மற்றும் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானங்களில் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்து, போட்டியிலும் வெற்றி பெற்றது இதுவே முதல் முறை ஆகும்.
Cricket
டெஸ்ட் கிரிக்கெட்…இலக்கு எளியது….கோப்பை இந்தியாவுக்கு?…
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது வங்கதேச கிரிக்கெட் அணி. மூன்று இருபது ஓவர் போட்டி தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரினல் விளையாட இந்தியாவிற்கு வந்துள்ள வங்கதேச அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வைத்து நடந்த இந்தப் போட்டியில் அசாத்திய திறமையை வெளிப்படுத்திய இந்திய அணி அசத்தலான வெற்றியை பெற்றது. இந்திய அணியின் ஆல்-ரவுண்டர்களான அஷ்வின் – ஜடேஜா இணை பேட்டிங் மற்றும் பவுலிங்கில் ஜொலிக்க, வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா. இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று பங்களாதேஷை பேட்டிங் செய்ய வைத்தது இந்தியா, மழை குறுக்கீட்டின் காரணமாக போட்டி தடை பெற்று வந்த நிலையில் நான்காம் நாள் ஆட்டம் முழுவதுமாக நடந்து முடிந்தது.
போட்டியை வென்றாக வேண்டும் என்ற முனைப்போடு இந்திய வீரர்கள் இருபது ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதைப் போல பேட்டிங்கில் அதிரடி காட்டினர். இந்திய அணி முன்னிலை பெற்று டிக்ளர் செய்ய தனது இரண்டாவது இன்னிங்ஸை தடுமாற்றத்துடன் தொடர்ந்தது வங்காளதேசம்.
ஐந்தாம் நாளான இன்று நூற்றி நாற்பத்தி ஆறு ரன்களை எடுத்து பத்து விக்கெட்டுகளையும் இழந்தது வங்கதேசம். தொன்னூற்றி ஐந்து ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது இந்தியா.
நாலு ஓவர்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இருபத்தி ஒன்பது ரன்களை எடுத்து ரோஹித் சர்மாவின் விக்கெட்டினை பறிகொடுத்து விளையாடி வருகிறது இந்தியா. இந்த போட்டியில் வென்றாலும், டிராவில் முடிவடைந்தாலும் இந்திய அணி கோப்பையை தன் வசப்படுத்திக்கொள்ளும்.
Cricket
கான்பூர் சம்பவம்.. பின்னணியில் கம்பீர்-ரோகித் பிளான்.. டிரெசிங் ரூம் சீக்ரெட் சொன்ன பந்துவீச்சு பயிற்சியாளர்
மழை காரணமாக இரண்டு நாள் ஆட்டம் தடைப்பட்ட நிலையில், வங்கதேசம் அணி நான்காம் நாள் ஆட்டத்தை எப்படி கொண்டு செல்வது என நிச்சயம் திட்டம் தீட்டியிருக்கும். எனினும், அவை அனைத்தையும் ஓவர்டேக் செய்யும் அளவுக்கு இந்திய அணி தனது செயல்பாடுகளில் தீவிரம் காட்டியது. துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது, வங்கதேசம் அணியின் விக்கெட்டுகளை விரைந்து வீழ்த்தியது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி ஸ்கோர் போர்டை எகிற செய்த சம்பவம் பலருக்கும் நீண்டகாலம் நினைவில் நிற்கும். இந்த நிலையில், நான்காம் நாள் ஆட்டம் துவங்கும் முன் இந்திய டிரெசிங் ரூமில் என்ன நடந்தது, இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங் தொடங்கும் முன் எடுக்கப்பட்ட முடிவு என்ன? என்ற கேள்விகளுக்கு இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பதில் அளித்துள்ளார்.
“கவுதம் கம்பீரின் மனநிலை கூட, போட்டியில் ஆதிக்கம் செலுத்தி, முடிந்த வரை முன்னணியில் இருக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. இதனை சாத்தியப்படுத்த ஒரு தலைவர் முன்னணியில் இருந்து செயல்பட வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும். அந்த வகையில், ரோகித் சர்மா இதனை பலமுறை செய்து காட்டிய நிலையில், மீண்டும் அதை நிரூபித்துள்ளார். பந்து பவுன்ஸ் ஆகலாம், மெல்ல கீழேயும் வரலாம் என்ற பிட்ச்-இல் தான் எதிர்கொண்ட முதல் பந்தில் இருந்தே சிக்ஸ் அடித்தது.”
“பந்துவீச்சில் சற்று பின்னடைவு ஏற்படலாம். ஆனால், கேப்டன் முன்னணியில் இருந்து செயல்படுவது, அணியை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்வதை பார்க்க சிறப்பாக இருக்கிறது. என்னைப் பொருத்தவரை இது மிகவும் அருமையாகவும், ரசிக்கும் படியாகவும் இருந்தது. ஒவ்வொருத்தரும் தங்களது பணியில் மிகவும் ஈடுபாடு கொண்டுள்ளனர், அதனை களத்திலும் பிரதிபலிக்க செய்கின்றனர். மீண்டுவருவதை பார்க்கும் போது அவர்கள் அங்கு சரியாகவே உள்ளனர்,” என்று மோர்னே மோர்கல் தெரிவித்தார்.
Cricket
கோலி-அஷ்வின் டாக்டிக்ஸ்.. உடனே விழுந்த விக்கெட்
இந்தியா வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. இரண்டு நாள் ஆட்டத்தில் வெற்றியை பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி காட்டிய வேகம் பல சாதனைகளை படைத்ததோடு, வங்கதேசம் வீரர்கள் மற்றும் ஒட்டுமொத்த ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
நான்காவது நாளில் வங்கதேசம் அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட் செய்ய வைத்த ரோகித் சர்மா, நேற்றைய ஆட்டம் முடிவதற்குள் சில விக்கெட்டுகளை வீழ்த்துவதில் தீயாக செயல்பட்டார். இதற்கு ஏற்றார் போல் பந்துவீச்சாளர்களை களமிறக்கியதோடு, நினைத்தப்படி இந்திய அணி முன்னிலையில் இருப்பதை உறுதிப்படுத்தினார். நேற்றைய ஆட்டத்தின் நிறைவில் இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டை எடுக்க பல தந்திரங்களை தொடர்ச்சியாக கையாண்டனர்.
அந்த வகையில், ரவிச்சந்திரன் அஷ்வின் சுழலில் சிக்கி வங்கதேசம் அணி இரண்டு விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. ஒவ்வொரு வீரருக்கும் எப்படி பந்துவீச வேண்டும் என்ற திட்டமிடல் அணியினருடன் எப்போதும் இருக்கும். நேற்றைய ஆட்டத்தில் ரவிச்சந்திரன் அஷ்வின் வீசிய குறிப்பிட்ட ஓவரை வங்கதேசம் அணியின் துவக்க வீரரான ஜாகிர் ஹாசன் எதிர்கொண்டார். அப்போது குறுக்கிட்ட இந்திய வீரர் விராட் கோலி, அஷ்வினிடம் ஏதோ கருத்து தெரிவித்தார்.
இதன்பிறகு, அஷ்வின் வீசிய பந்தில் ஜாகிர் ஹாசன் தனது விக்கெட்டை பறிக்கொடுத்து பெவிலியன் திரும்பினார். இடதுகை ஆட்டக்காரரான ஹாசன் பத்து ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். நேற்றைய ஆட்டநேர முடிவில் வங்கதேசம் அணி 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இன்னிங்ஸில் 26 ரன்கள் பின்னணயில் உள்ளது.
முன்னதாக இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் காரணமாக இந்திய அணி 34.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.
Cricket
விக்கெட் இருந்தும் டிக்ளேர் செய்த ரோகித்.. பின்னணியில் பக்கா ஸ்கெட்ச்.. பயங்கரமா இருக்கே..!
இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அதன் நான்காம் நாளில் பற்றி எரிந்தது. நான்காம் நாளின் முதல் செஷனில் இருந்தே வேலையை காட்டத் துவங்கிய இந்திய அணி, படிப்படியாக அதிரடி அவதாரம் எடுத்து ஆடியது. இந்தப் போட்டின் இரண்டு நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது ரசிகர்களை ஏமாற்றம் கொள்ள செய்தது.
இரண்டு நாள் ஏமாற்றத்திற்கு தீனிப்போடும் வகையில், நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி விஸ்வரூப மோடிற்கு மாறியது. வங்கதேசம் அணியை 233 ரன்களில் ஆல் அவுட் ஆக்கிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் துவக்கத்திலேயே டாப் கியருக்கு மாறியது. ரோகித் மற்றும் ஜெய்ஸ்வால் ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்த, டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் மூன்று ஓவர்களில் 50 ரன்களை கடந்தது.
இருந்தும், விடாமல் அடித்து ஆடிய இந்திய அணி 10.1 ஓவரில் 100 ரன்களையும், 18.2 ஓவர்களில் 150 ரன்களையும் கடந்தது. இடையில் சில விக்கெட்டுகள் சரிந்த நிலையில், அடுத்தடுத்து வந்த வீரர்கள் ஃபயர் மோடில் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதனால், இந்திய அணி 24.4 ஓவர்களில் 200 ரன்களை கடந்தது. பிறகு 30.4 ஓவர்களில் இந்திய அணி 250 ரன்களை கடந்தது.
இவ்வாறு டெஸ்ட் போட்டியில் அதிவேக 50 ரன்கள், 100 ரன்கள், 150 ரன்கள், 200 ரன்கள் மற்றும் 250 ரன்களை அடித்த முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. 34.4 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்களை குவித்த போது, முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. 21-ம் நூற்றாண்டில் 25 ஓவர்களுக்குள் டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஸில் டிக்ளேர் செய்த முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.
கைவசம் விக்கெட் இருந்த போதிலும், இந்திய கேப்டன் இன்னிங்ஸை டிக்ளேர் செய்ய சூப்பர் காரணம் இருந்தது. கைவிசம் விக்கெட் இருக்கும் போது, கூடுதல் ரன்களை அடிப்பதை பலரும் திட்டமிடுவர். எனினும், நான்காம் நாள் ஆட்டத்தில் கிட்டத்தட்ட 20 ஓவர்கள் வரை பந்துவீச நேரம் இருக்கும் போது, இந்திய கேப்டன் ரோகித் சர்மா டிக்ளேர் செய்தார்.
இவ்வாறு செய்ததும், பந்துவீச களமிறங்கிய இந்திய வீரர்கள் விக்கெட் கைப்பற்றுவதில் தீவிரம் காட்டினர். மேலும், நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் அணி 26 ரன்களை மட்டுமே அடித்து 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இதோடு, ஐந்தாம் நாள் ஆட்டத்தை துவங்கும் போது அந்த அணி 26 ரன்கள் பின்தங்கியிருக்கும்.
ஐந்தாம் நாள் ஆட்டத்திலும், வங்கதேசம் அணியை குறைந்த ரன்களில் ஆட்டமிழக்க செய்து, எஞ்சியுள்ள ரன்களை அடித்து போட்டியில் வெற்றி பெறுவதை ரோகித் சர்மா திட்டமாக வைத்திருக்கிறார். இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அட்டவணையில் இந்திய அணி தொடர்ந்து முன்னணி இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
latest news2 days ago
வெளியான அதிரடி உத்தரவு.. இனி 15 நாட்களில் பட்டா மாற்றிக் கொள்ளலாம்..!
-
Cricket1 day ago
கான்பூர் சம்பவம்.. பின்னணியில் கம்பீர்-ரோகித் பிளான்.. டிரெசிங் ரூம் சீக்ரெட் சொன்ன பந்துவீச்சு பயிற்சியாளர்
-
Cricket2 days ago
ஐபிஎல் 2025: RCB ஜெயிக்க இதை செய்யனும்!
-
latest news2 days ago
பெரியாரின் தொண்டனாக பெருமை…உதயநிதியை வாழ்த்திய நடிகர் சத்யராஜ்…
-
Cricket1 day ago
கோலி-அஷ்வின் டாக்டிக்ஸ்.. உடனே விழுந்த விக்கெட்
-
Cricket21 hours ago
டெஸ்ட் கிரிக்கெட்…இலக்கு எளியது….கோப்பை இந்தியாவுக்கு?…
-
latest news23 hours ago
ரேஷன் கார்டில் முக்கிய அப்டேட் செய்ய மறந்துட்டீங்களா, அடுத்து என்ன ஆகும் தெரியுமா?
-
Cricket56 mins ago
293 டெஸ்ட் போட்டிகளில் 24 முறை தான்.. புது வரலாறு படைத்த இந்தியா-வங்கதேசம்