சிம்பிளாக…சிங்கிளாக…சாதித்த சீதா…இரண்டு நாட்களில் உருவான இரும்புப் பாலம்…

வயநாடு துயர சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரும்பும் பக்கமெல்லாம் கல்நெஞ்சங்களையும் கரைய வைக்கும் காட்சிகள் தான் தென்பட்டு வருகிறது. தோண்டத் தோண்ட மனித உடல்கள், இன்னும் யாரெல்லாம், எங்கெல்லாம் சிக்கி இருக்கிறார்கள் என இரவு, பகலாக தேடி அலையும் மீட்புக் குழுவினர். இப்படி சொல்ல முடியாத அளவில் ஓரே இரவில் பலரின் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியமைத்து விட்டது இந்த இயற்கை பேரிடர்.

தண்ணீர் சூழ்ந்த பகுதிகளுக்குள் செல்ல முடியாமல் தவித்த நிலையில் மீட்பு பணிகளுக்காக கேரளாவிற்கு வந்து இறங்கினர் நூற்றி நாற்பது ராணுவ வீரர்கள். இதில் ஒரே வீரமங்கை சீதா ஷெல்கே.

மகாராஷ்ட்ரா மாநிலம் அகமது நகர், கடல்காவோன் கிராமத்தைச் சேர்ந்த அசோக் என்ற விவசாயிக்கு நான்காவது மகளாக பிறந்தவர் சீதா ஷெல்கே.

MAJOR SEETHA SHELKE
MAJOR SEETHA SHELKE

ஐபிஎஸ் படிக்க வேண்டும் என்ற தனது பள்ளிக்கால ஆசையோடு வாழ்ந்து வந்திருக்கிறார் அப்போது. பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது ராணுவ வீரர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு தொடர் கதையாக நாளிதழ் ஒன்றில் வெளிவர, அதனை படித்த இவருக்கு  ராணுவத்தின் மீது அதிக மதிப்பு வந்திருக்கிறது.

ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற தன்னை தயார் படுத்தத் துவங்கிய இவர் ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றும் வாய்ப்பினை பெற்றார்.  2015 ஜம்மு கஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது மீட்புக் குழுவினருடன் பயணித்த அனுபவம் கொண்ட சீதா ஷெல்கே, வயநாடு மீட்புக்குழுவில் இடம் பிடித்தார். மெக்கானிக்கல் பிரிவில் பொறியாளர் பட்டம் பெற்ற இவர், ராணுவத்திலும் அதே பிரிவில் பணியாற்றியிருக்கிறார்.

சூரல்மலை – முண்டைக்காய், இருள்வளஞ்சி ஆற்றின் குறுக்கே இரும்புப் பாலத்தினை இரண்டு நாட்களுக்குள் முடித்திருக்கிறார் சீதா ஷெல்கே. பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இவர் இந்திய ராணுவத்தில் ஆண், பெண் பாகுபாடு கிடையாது. இது கூட்டு முயற்சி என்றார். சீதா ஷெல்கே அமைத்துக்கொடுத்த இரும்புப் பாலத்தின் மீது பயணித்து தான் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Comment