Cricket
டோனி விளையாட நினைக்கும் வரை ரூல்ஸ் மாறிட்டே இருக்கும்.. முகமது கைஃப்
ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடருக்கான விதிகள் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மேலும், ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற அறிவிப்பும் வெளியானது. இந்த அறிவிப்பின் படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ். டோனி அடுத்த சீசனிலும் நிச்சயம் விளையாடுவார் என்பதை உணர்த்தும் வகையில் தான் உள்ளது.
அந்த வரிசையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் விதிமுறைகள் எம்.எஸ். டோனி கிரிக்கெட் விளையாட விரும்பும் வரை தொடர்ந்து மாற்றப்படும் என்று தெரிவித்தார்.
சமீபத்திய ஐ.பி.எல். விதிகளின் படி ஒவ்வொரு அணியும் அதிபட்சம் ஆறு வீரர்களை தங்களது அணியில் தக்கவைத்துக் கொள்ள முடியும். இதில் ஐந்து வீரர்களை தக்கவைத்துக் கொள்ளவும், ஒரு வீரருக்கு ஆர்.டி.எம். கார்டு முறையில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் விளையாடாமல் இருக்கும் வீரர்களை அன்கேப்டு வீரர்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஐ.பி.எல். தொடரில் வீரர்களை தக்க வைப்பது தொடர்பாக பேசிய முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப், “நீங்கள் டோனியை மீண்டும் பார்ப்பதற்கான வாய்ப்பை பெறுவீர்கள். அவர் ஃபிட்டாக இருக்கிறார், அவரது பேட்டிங் ஸ்டிரைக் ரேட் 200 ஆக உள்ளது, இதனாலேயே அவர் விளையாட விரும்பும் வரை விதிகள் மாறிக் கொண்டே இருக்கும் என்று நான் நம்புகிறேன்.”
“அவர் ஐ.பி.எல். தொடரில் விளையாட வேண்டும் என்று நினைத்தால், அவர் விளையாடுவார். அவர் அந்த அளவுக்கு பெரிய வீரர், பெரிய வெற்றியாளர், அவர் சி.எஸ்.கே. அணியில் தலைவராக இருந்து வந்துள்ளார். இந்த விதிமுறை சரியாகவே மாற்றப்பட்டு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.”
“அவர் ஃபிட்டாக இருப்பதோடு, நன்றாக விளையாடுகிறார் என்றே நான் நம்புகிறேன், ஏன் விதியை மாற்றி அவரை விளையாட வைக்கக் கூடாது. விதிமுறை டோனிக்காகவே மாற்றப்பட்டுள்ளது என்று எல்லோருக்கும் நிச்சயம் தெரியும். ஏன் டோனி போன்ற ஒரு வீரருக்காக விதியை மாற்றக் கூடாது?,” என்று தெரிவித்தார்.
Cricket
மொத்தமா திருடிட்டாங்க.. இன்ஸடாவில் புலம்பி தள்ளிய ஆன்ட்ரே ரஸல்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் ஆன்ட்ரே ரசல். இவர் தற்போது கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ‘டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்’ அணிக்காக விளையாடி வருகிறார். 2024 கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் போட்டி ஒன்றில் திருடப்பட்ட உணர்வு ஏற்பட்டதாக ஆன்ட்ரே ரசல் மன வருத்தம் தெரிவித்துள்ளார்.
பார்படோஸ் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது மைதானத்தில் இருந்த மின்விளக்கு சரியாக இயங்காமல் போனது. இதனால், போட்டி சிறிது நேரம் தடைப்பட்டு மீண்டும் துவங்கியது. போட்டி நேரத்தில் மாற்றம் ஏற்பட்டதை அடுத்து டி.எல்.எஸ். விதிப்படி எதிரணிக்கு வெற்றி இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. இந்தப் போட்டியில் டேவிட் மில்லரின் அதிரடி அரைசதம் காரணமாக பார்படோஸ் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
போட்டியில் பார்படோஸ் ராயல்ஸ் அணி பேட் செய்து கொண்டிருந்த போது சரியாக 19.1 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்களை குவித்து இருந்த போது மைதானத்தின் மின்விளக்குகள் செயல்படாமல் போனது. இதைத் தொடர்ந்து பத்து நிமிடங்கள் போட்டி நிறுத்தப்பட்டு, பிறகு மீண்டும் துவங்கியது.
அப்போது ஐந்து ஓவர் போட்டியில் ராயல்ஸ் அணி வெற்றி பெற 60 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த இலக்கை துரத்தும் போது டேவிட் மில்லர் 17 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
இது குறித்து கோபமுற்ற ஆன்ட்ரே ரசல் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “இணையத்திற்கு வந்து எனது கருத்தை வெளிப்படுத்தக்கூடிய நபர் நான் இல்லை, ஆனால் இந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் தொடரை பொருத்தவரை நான் திருடப்பட்டதாக உணர்கிறேன். அந்த சூழல்…, சரியாக அந்த நேரத்தில் மின் விளக்குகளில் பிரச்சினை ஏற்பட்டது.. அதன்பிறகு 30 பந்துகளில் 60 ரன்கள் எனும் இலக்கு வழங்கப்பட்டது மிகப்பெரிய… ஆம் ஆன்ட்ரே ரசல் சரி என்று கூறியது சரி தான்.. … ஆனால் இது உண்மையான …,” என்று குறிப்பிட்டுள்ளார்.
Cricket
மகளிர் டி20 உலகக் கோப்பை.. 10 ஆண்டுகளில் முதல் வெற்றி.. சம்பவம் செய்த வங்கதேசம்
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஷார்ஜாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் வங்கதேசம் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் வங்கதேசம் அணி 16 ரன்களில் வெற்றி பெற்று அசத்தியது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு பிறகு மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் போட்டியில் வங்கதேசம் அணி முதல் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றி மிகவும் எமோஷனலாக இருப்பதாக வங்கதேசம் அணியின் கேப்டன் தெரிவித்தார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 119 ரன்களையே எடுத்தது. எனினும், பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட வங்கதேசம் அணி ஸ்காட்லாந்து அணியை 20 ஓவர்களில் 103 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. இதனால் வங்கதேசம் அணி 16 ரன்களில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது குறித்து பேசிய வங்கதேசம் அணியின் கேப்டன் நிகர் சுல்தானா ஜோதி, “பத்து ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்றது மிகவும் எமோஷனலாக இருக்கிறது. இந்த வெற்றிக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது.”
“எவ்வளவு சிறப்பாக கிரிக்கெட் விளையாடினாலும், போட்டியில் வெற்றி பெறாத வரை அதில் எந்த பலனும் இல்லை. மகளிர் கிரிக்கெட்டை பொருத்தவரை நீண்ட காலத்திற்கு பிறகு, நாங்கள் எதையோ செய்திருக்கிறோம் என்ற எண்ணம் கொண்டிருக்கிறோம்.”
“வங்கதேசத்தில் சரியான தருணத்தை ஏற்படுத்திக் கொண்டு அதன்பிறகு அதை வைத்தே முன்னேற வேண்டும் என்று நாங்கள் கூறுவோம். தற்போது நாங்கள் இன்னும் பெரிய விஷயத்தை அடைவதற்கு கனவு காணப்போகிறோம். இதேபோன்று எங்களால் இதைவிட இன்னும் சிறப்பாக சாதிக்க முடியும் என்று வங்கதேசத்தில் உள்ள ரசிகர்கள், குடும்பத்தார் மற்றும் எங்களுக்கு ஆதரவு தெரிவிப்போர் கனவு கொண்டுள்ளனர்,” என்று தெரிவித்தார்.
Cricket
ஹர்பஜன் சொன்னது பொய்.. உண்மையை உடைத்த CSK பிசியோ
இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிசியோதெரபிஸ்ட் வெளுத்து வாங்கியுள்ளார். முன்னதாக எம்.எஸ். டோனியின் கோபம் பற்றி ஹர்பஜன் சிங் சொன்ன கருத்துக்கு சி.எஸ்.கே. அணியின் பிசியோ டாமி சிம்செக் பதில் அளித்துள்ளார்.
சமீபத்தில் பேசிய ஹர்பஜன் சிங் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையிலான போட்டிக்கு பிறகு எம்.எஸ். டோனி டிரெசிங் ரூமில் இருந்த திரையை ஓங்கி குத்தினார் என்றும் அதனை தான், மாடிப்படியில் இருந்து பார்த்ததாகவும் தெரிவித்தார். அந்த போட்டியின் போது ஹர்பஜன் சிங் கமென்ட்ரி செய்து வந்தார்.
“”நான் படிக்கட்டில் இருந்து பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். அவர்கள் களத்தில் ஆரவாரமாக கொண்டாடினர். சி.எஸ்.கே. வீரர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க அணிவகுத்து நின்றிருந்தனர். ஆனால், அவர்கள் வருவதற்கு சிறிது நேரம் ஆகிவிட்டது. ஆர்.சி.பி. வீரர்கள் கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு திரும்புவதற்குள் எம்.எஸ். டோனி மீண்டும் டிரெசிங் ரூம் சென்றுவிட்டார். அப்போது, அங்கிருந்த திரையை எம்.எஸ். டோனி வேகமாக குத்தினார். இதில் எந்த தவறும் இல்லை. விளையாட்டில் இத்தகைய சம்பவங்கள் நடப்பது வழக்கமான ஒன்று தான்,” என்று ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.
ஹர்பஜன் சிங்கின் இத்தகைய கருத்துக்கு சி.எஸ்.கே. அணியின் பிசியோதெரபிஸ்ட் டாமி சிம்செக் காட்டமாக கருத்து தெரிவித்து பதிலடி கொடுத்தார். மேலும், இந்தத் தகவல் “போலி செய்தி” என்றும் “முழு குப்பை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த பதிவில் அவர், “இது முழுக்க முழுக்க குப்பை! எம்.எஸ். டோனி அப்படி எதையும் உடைக்கவில்லை. போட்டிக்கு பிறகு அவரை நான் இதுவரை அப்படி பார்த்ததே இல்லை. போலி செய்தி!,” என்று குறிப்பிட்டுள்ளார்.
Cricket
தற்கால வீரர்களில் இவர் மட்டும் தான்.. மிரட்டி விட்ட விராட்..!
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும், புதிய சாதனை படைப்பதை விராட் வாடிக்கையாக மாற்றி வைத்துள்ளார். அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்று முடிந்த இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 பவுண்டரிகளை விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இணைந்துள்ளார். வங்கதேசம் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் போட்டியில் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 பவுண்டரிகளை கடந்துள்ளார். ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் 1000 பவுண்டரிகளை விராட் கோலி கடந்துவிட்ட நிலையில், தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விராட் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இந்த மைல்கல் மூலம் சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்காரா, ரிக்கி பாண்டிங் வரிசையில் விராட் கோலி 1000 பவுண்டரிகளை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார். இதுதவிர தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் இந்த சாதனையை படைத்த ஒரே வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் இந்த சாதனை படைத்த மற்ற வீரர்கள் கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கான்பூர் டெஸ்ட் போட்டியை பொருத்தவரை, அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்தப் போட்டி முடிந்த பிறகு இந்திய வீரர் விராட் கோலி, வங்கதேசம் அணியின் ஷகிப் அல் ஹாசனுக்கு தனது பேட்-ஐ பரிசாக வழங்கினார்.
Cricket
இலங்கை வீரருக்கு ஓராண்டு தடை – ICC
இலங்கை அணி கிரிக்கெட் வீரருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. ஒரு ஆண்டு விளையாடுவதற்கு தடை விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கை அணியன் இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரவீன் ஜெயவிக்ரம, அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒரு ஆண்டிற்கு தடை செய்யப்பட்டுள்ளார். இதில், ஆறு மாதங்கள் இடைநீக்கம் செய்யப்படுகிறார் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
ஐ.சி.சி. ஊழல்தடுப்பு விதிகளை ஜெயவிக்ரம மீறியதாக ஒப்புக் கொண்டதை அடுத்து அவருக்கு தடை விதிக்கப்பட்டது. ஐ.சி.சி. விதிகள் 2.4.7-ஐ ஜெயவிக்ரம மீறியதாக ஒப்புக் கொண்டார். ஆன்டி கரப்ஷன் கோட் எனப்படும் ஏ.சி.யு. நடத்தும் விசாரணையை தாமதப்படுத்துவது, தடுப்பது, ஊழல் அல்லது முறைகேடுகளை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் அல்லது அது தொடர்பான ஆவணங்களை தடுப்பது, தகவல்களை அழிப்பது ஐ.சி.சி. விதிகளின் கீழ் குற்றமாக கருதப்படும்.
ஜெயவிக்ரம கடைசியாக 2022 ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக விளையாடினார். அவர் அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்து டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடினார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 32 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் மற்றும் இலங்கை பிரீமியர் லீக் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இலங்கை கிரிக்கெட் (எஸ்எல்சி) மற்றும் ஐ.சி.சி உடனான உடன்படிக்கையில், ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 1.7.4.1 மற்றும் 1.8.1 விதிகளின்படி செயல்பட்டது. ஐ.சி.சி. ஊழல் எதிர்ப்புக் குறியீடு மற்றும் முழு விவரங்கள் ஐ.சி.சி. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
-
Cricket1 day ago
டோனி ஸ்கிரீனை குத்தினார்.. படியில் இருந்து அதை பார்த்தேன்.. ஹர்பஜன் சிங்
-
Cricket1 day ago
இலங்கை வீரருக்கு ஓராண்டு தடை – ICC
-
india2 days ago
மகாத்மா காந்தி பிறந்த நாள்…பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் மரியாதை…
-
latest news1 day ago
ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பர் லின்க் செய்வது இவ்வளவு ஈசியா?
-
Cricket1 day ago
நிதானமாக ஆடிய ஷர்துல்.. அவுட் ஆனதும் மருத்துமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?
-
latest news1 day ago
குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோவிலில் கொடியேற்றம்..பன்னிரெண்டாம் தேதி சூரசம்ஹாரம்…
-
latest news1 day ago
நாலு நாளைக்கு நச்சு எடுக்கப் போகுதா மழை?…அப்போ அலர்டா இருக்கனுமா?…
-
latest news2 days ago
அதிமுக எம்ஜிஆர் ஜெயலலிதா பாதையில் செல்கிறதா?…பாஜக எச்.ராஜா கேள்வி?…