தமிழ்நாடு அரசியல் களம் தற்பொழுது ஒரு புதிய பாதையை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, தமிழக வெற்றி கழகத்தின் புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, நிர்வாக ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் பல அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. தவெக அரசின் புதிய அமைச்சரவையில் இளம் தலைவர்களுக்கும், பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீதான விமர்சனங்களும் ஒருபுறம் சமூக வலைதளங்களில் தீவிரமாக எழுந்தன. குறிப்பாக, தமிழகத்தின் புதிய தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கீர்த்தனா சம்பத் அவர்களை குறிவைத்து, அவரது ஆடை மற்றும் வெளித்தோற்றத்தை விமர்சித்துச் சிலர் சமூக வலைதளங்களில் மலிவான டிரோல்களையும் நையாண்டிகளையும் பரப்பி வந்தனர்.
இத்தகைய சூழலில், அமைச்சர் கீர்த்தனாவை தனிப்பட்ட முறையில் விமர்சித்தும், தரம் தாழ்ந்த முறையில் ட்ரோல் செய்தும் வந்த மாரிதாஸ் போன்ற நபர்கள் தற்பொழுது தங்களின் சட்டவிரோத செயல்பாடுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வன்மத்தையும் அவதூறுகளையும் மட்டுமே மூலதனமாக கொண்டு, ஒரு பெண் என்றும் பாராமல் அவரது தோற்றத்தை எள்ளி நகையாடியவர்களின் இந்த வீழ்ச்சி, தவறான உள்நோக்கத்துடன் செயல்படுபவர்களுக்கு ஒரு தகுந்த பாடமாக அமைந்துள்ளது. வெற்று விமர்சனங்களை மட்டுமே முன்வைத்து, மற்றவர்களின் உழைப்பை கொச்சைப்படுத்துபவர்கள் இறுதியில் சட்டத்தின் முன்னால் மண்டியிடத்தான் வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியிருக்கிறது.
ஆனால், தங்களை பற்றி வந்த எந்தவொரு மலிவான விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல், அமைச்சர் கீர்த்தனா சம்பத் அவர்கள் தன் முழு கவனத்தையும் மக்கள் பணியிலும், தமிழகத்தின் தொழில் வளர்ச்சியிலும் மட்டுமே செலுத்தி வருகிறார். தன்னை விமர்சித்தவர்கள் சிறை கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில், அவர் தென்கொரியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு, அங்குள்ள புகழ்பெற்ற எச்டி ஹூண்டாய் கனரக தொழில் நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளத்தை பார்வையிட்டுள்ளார்.
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான புதிய தவெக அரசு, தமிழ்நாட்டின் உற்பத்தித் துறையை உலகளாவிய போட்டித்திறனுடன் வளர்க்கவும், சர்வதேச முதலீடுகளை ஈர்க்கவும் தீவிரமான கொள்கை முடிவுகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2025 டிசம்பர் மாதத்தில் தமிழ்நாட்டில் ஒரு புதிய கப்பல் கட்டும் தளத்தை அமைப்பதற்காக ஹூண்டாய் நிறுவனம் மற்றும் தமிழக அரசு இடையே வணிக ஒப்பந்தம் கையெழுத்தானது. அதனை தொடர்ந்து, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இதற்கான ஒத்துழைப்பு இந்திய மத்திய அரசு வரை விரிவுபடுத்தப்பட்டது. இந்த உன்னத நோக்கத்தின் அடுத்தகட்டமாகவே அமைச்சர் கீர்த்தனாவின் இந்த தென்கொரிய பயணம் அமைந்துள்ளது.
அமைச்சர் கீர்த்தனா சம்பத் தலைமையிலான தமிழக குழுவினர், ஹூண்டாய் நிறுவனத்தின் கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் உற்பத்தி மேலாண்மை அமைப்புகளை நேரில் பார்வையிட்டு, இருதரப்புப் பரஸ்பர ஒத்துழைப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தியுள்ளனர். புதிய கப்பல் கட்டும் தளத்தை வெற்றிகரமாக அமைப்பதற்காக, தள கட்டுமானம், துறைமுக உள்கட்டமைப்பு வசதிகள், வரி சலுகைகள் மற்றும் மானியங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதரவு நடவடிக்கைகளை தமிழக அரசு தற்பொழுது தீவிரமாக தயாரித்து வருகிறது. தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சி பொறியாகக் கப்பல் கட்டும் மற்றும் கடல்சார் தொழிலை வளர்க்க புதிய அரசு கொண்டுள்ள உறுதியான எண்ணத்திற்கு இந்த விஜயம் ஒரு சான்றாகப் பார்க்கப்படுகிறது.
ஒரு பெண்ணின் திறமையையோ, அவரது உழைப்பையோ பார்க்காமல், வெறும் ஆடையையும் தோற்றத்தையும் மட்டுமே விமர்சித்தவர்களுக்கு, தென்கொரியாவில் ஹூண்டாய் குழுவினருடன் இணைந்து தமிழகத்திற்கு பல்லாயிரக்கணக்கான கோடி முதலீடுகளை ஈர்க்கும் இந்த மாஸ் ஆக்ஷன் மூலம் அமைச்சர் கீர்த்தனா தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். வெற்று பேச்சுகளுக்கு செவிசாய்க்காமல், உழைப்பால் உயர்ந்து நிற்கும் தவெக-வின் பெண் சிங்கங்களின் இத்தகைய செயல்பாடுகள் ஒட்டுமொத்த தமிழக பெண்களுக்கும் ஒரு மிகப்பெரிய முன்மாதிரியாகவும் பெருமையாகவும் அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.