Cricket
ஒருவழியா நல்ல பிட்ச் கிடைச்சிருச்சு… தென்னாப்பிரிக்காவின் நிம்மதி!
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் அமெரிக்க அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா.
ஆன்டிகுவா நார்த் சவுண்ட் மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணிக்கு தொடக்க வீரர் குவிண்டின் டிகாக் சிறப்பான தொடக்கம் கொடுத்தார். அவர் 40 பந்துகளில் 74 ரன்கள் அடிக்க, இந்த உலகக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோரை 13-வது ஓவரிலேயே தாண்டியது தென்னாப்பிரிக்கா. அவரும் கேப்டன் மார்க்ரமும் இணைந்து 110 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து பெரிய ஸ்கோருக்கு அடித்தளமிட்டனர்.
இடையில், 17 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த இடைவெளியில் 3 விக்கெட்டுகளை இழக்க தென்னாப்பிரிக்காவின் ரன் ரேட் மட்டுப்பட்டது. 20 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் அடித்தது. நார்த் சவுண்ட் மைதானத்தில் நடைபெற்றுள்ள 18 டி20 சர்வதேச போட்டிகளில் இதுவே அதிகபட்ச ஸ்கோராகும்.
195 ரன்கள் இமாயல இலக்குடன் களமிறங்கிய அமெரிக்க அணிக்கு டெய்லர் – கவுஸ் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. டெய்லர் 14 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த நிதிஷ், ஆரோன் ஜோன்ஸ், கோரி ஆண்டர்சன் ஆகியோர் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் கவுஸ், நோர்க்கியா வீசிய 15-வது ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என நம்பிக்கை அளித்தார்.
அதேபோல், ஷம்ஸி வீசிய 19-வது ஓவரில் 3 சிக்ஸர்கள் வாயிலாக 22 ரன்கள் கிடைத்தாலும், அமெரிக்க அணியின் வெற்றிக்கு அது போதுமானதாக இல்லை. இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வென்று தென்னாப்பிரிக்கா, கடந்த 2019 டி20 உலகக் கோப்பையில் செய்த சாதனையை சமன் செய்திருக்கிறது.
Cricket
தற்கால வீரர்களில் இவர் மட்டும் தான்.. மிரட்டி விட்ட விராட்..!
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும், புதிய சாதனை படைப்பதை விராட் வாடிக்கையாக மாற்றி வைத்துள்ளார். அந்த வகையில், சமீபத்தில் நடைபெற்று முடிந்த இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 பவுண்டரிகளை விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி இணைந்துள்ளார். வங்கதேசம் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் போட்டியில் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 பவுண்டரிகளை கடந்துள்ளார். ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் 1000 பவுண்டரிகளை விராட் கோலி கடந்துவிட்ட நிலையில், தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விராட் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இந்த மைல்கல் மூலம் சச்சின் டெண்டுல்கர், குமார் சங்கக்காரா, ரிக்கி பாண்டிங் வரிசையில் விராட் கோலி 1000 பவுண்டரிகளை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்று இருக்கிறார். இதுதவிர தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் இந்த சாதனையை படைத்த ஒரே வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் இந்த சாதனை படைத்த மற்ற வீரர்கள் கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கான்பூர் டெஸ்ட் போட்டியை பொருத்தவரை, அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்தப் போட்டி முடிந்த பிறகு இந்திய வீரர் விராட் கோலி, வங்கதேசம் அணியின் ஷகிப் அல் ஹாசனுக்கு தனது பேட்-ஐ பரிசாக வழங்கினார்.
Cricket
இலங்கை வீரருக்கு ஓராண்டு தடை – ICC
இலங்கை அணி கிரிக்கெட் வீரருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. ஒரு ஆண்டு விளையாடுவதற்கு தடை விதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கை அணியன் இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரவீன் ஜெயவிக்ரம, அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒரு ஆண்டிற்கு தடை செய்யப்பட்டுள்ளார். இதில், ஆறு மாதங்கள் இடைநீக்கம் செய்யப்படுகிறார் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
ஐ.சி.சி. ஊழல்தடுப்பு விதிகளை ஜெயவிக்ரம மீறியதாக ஒப்புக் கொண்டதை அடுத்து அவருக்கு தடை விதிக்கப்பட்டது. ஐ.சி.சி. விதிகள் 2.4.7-ஐ ஜெயவிக்ரம மீறியதாக ஒப்புக் கொண்டார். ஆன்டி கரப்ஷன் கோட் எனப்படும் ஏ.சி.யு. நடத்தும் விசாரணையை தாமதப்படுத்துவது, தடுப்பது, ஊழல் அல்லது முறைகேடுகளை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் அல்லது அது தொடர்பான ஆவணங்களை தடுப்பது, தகவல்களை அழிப்பது ஐ.சி.சி. விதிகளின் கீழ் குற்றமாக கருதப்படும்.
ஜெயவிக்ரம கடைசியாக 2022 ஆம் ஆண்டு இலங்கை அணிக்காக விளையாடினார். அவர் அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்து டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடினார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 32 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் மற்றும் இலங்கை பிரீமியர் லீக் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இலங்கை கிரிக்கெட் (எஸ்எல்சி) மற்றும் ஐ.சி.சி உடனான உடன்படிக்கையில், ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 1.7.4.1 மற்றும் 1.8.1 விதிகளின்படி செயல்பட்டது. ஐ.சி.சி. ஊழல் எதிர்ப்புக் குறியீடு மற்றும் முழு விவரங்கள் ஐ.சி.சி. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
Cricket
டோனி ஸ்கிரீனை குத்தினார்.. படியில் இருந்து அதை பார்த்தேன்.. ஹர்பஜன் சிங்
கிரிக்கெட் உலகில் மிகவும் அமைதியானவராக அறியப்படுபவர் எம்.எஸ். டோனி. இந்திய அணிக்காக அதிக ஐ.சி.சி. கோப்பைகளை வென்ற கேப்டன், ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக அதிக கோப்பைகளை வென்ற கேப்டன் என பல சாதனைகளை எம்.எஸ். டோனி தன்பக்கம் வைத்திருக்கிறார்.
போட்டியின் முடிவு எந்த நிலையில் இருந்தாலும், மிகவும் அமைதியாக அந்த சூழலை கடந்து வருவதில் எம்.எஸ். டோனி பெயர்பெற்றவர். எம்.எஸ். டோனி களத்தில் சில முறை கோபத்தை வெளிப்படுத்திய சம்பவங்கள் மிகவும் குறைவு என்பதோடு, அவை யாராலும் மறக்க முடியாத அளவுக்கு வைரல் சம்பவங்களாகவும் உள்ளன.
எம்.எஸ். டோனி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2024 தொடரோடு ஓய்வு பெறுவார் என்ற வாக்கில் தகவல்கள் வெளியாகி வந்தன. கடந்த ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணி கோப்பையை வெல்லும் பட்சத்தில் வெற்றிக் கோப்பையுடன் ஓய்வு பெறுவதை எம்.எஸ். டோனி திட்டமாக கொண்டிருந்தார் என்று கூறப்பட்டது.
இந்த திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் வகையில், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் போட்டியில் சி.எஸ்.கே. மற்றும் ஆர்.சி.பி. அணிகள் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் மோதின. இந்தப் போட்டியில் இக்கட்டான சூழலில் எம்.எஸ். டோனி அவுட் ஆகி வெளியேறினார். இந்தப்போட்டியில் வெற்றி பெற முடியாத கோபம் எம்.எஸ். டோனி முகத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது.
மேலும், போட்டி முடிந்த பிறகு எம்.எஸ். டோனி உள்பட சி.எஸ்.கே. வீரர்கள் ஆர்.சி.பி. அணியுடன் கை குலுக்க களத்தில் காத்திருந்தனர். எனினும், வழக்கத்திற்கு மாறாக ஆர்.சி.பி. அணி வெற்றிக் கொண்டாட்டத்திற்கு சிறிது நேரத்தை எடுத்துக் கொண்டனர். இதனால் எம்.எஸ். டோனி ஆர்.சி.பி. வீரர்களுக்கு கை கொடுக்காமல் டிரெசிங் ரூம் சென்றுவிட்டார். இந்த சம்பவங்கள் அந்த சமயம் பேசுபொருளாக மாறியது.
இந்த நிலையில், அந்த சம்வத்திற்கு பின் டிரெசிங் ரூம் சென்ற எம்.எஸ். டோனி அங்கிருந்த திரைக்கு பலமாக குத்து விட்டார் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்தார். “ஆர்.சி.பி. கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர், அவர்கள் அப்படி செய்ய எல்லா உரிமையும் உள்ளது. அவர்கள் வெற்றிப் பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.”
“நான் படிக்கட்டில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்தேன். அவர்கள் களத்தில் ஆரவாரமாக கொண்டாடினர். சி.எஸ்.கே. வீரர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க அணிவகுத்து நின்றிருந்தனர். ஆனால், அவர்கள் வருவதற்கு சிறிது நேரம் ஆகிவிட்டது. ஆர்.சி.பி. வீரர்கள் கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு திரும்புவதற்குள் எம்.எஸ். டோனி மீண்டும் டிரெசிங் ரூம் சென்றுவிட்டார்.”
“அப்போது, அங்கிருந்த திரையை எம்.எஸ். டோனி வேகமாக குத்தினார். இதில் எந்த தவறும் இல்லை. விளையாட்டில் இத்தகைய சம்பவங்கள் நடப்பது வழக்கமான ஒன்று தான்,” என்று ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.
Cricket
நிதானமாக ஆடிய ஷர்துல்.. அவுட் ஆனதும் மருத்துமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?
மும்பை அணியின் ஆல்-ரவுண்டர் வீரரான ஷர்துல் தாக்குர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரானி கோப்பை தொடரில் விளையாடிக் கொண்டிருந்த ஷர்துல் கடுமையான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஷர்துல் தாக்குர் ஒன்பதாவது விக்கெட்டில் தனது அணிக்காக 36 ரன்களை அடித்தார். களத்தில் இருந்த போது 102 டிகிரி காய்ச்சலுடன் கிரீஸில் பேட்டிங் செய்து வந்துள்ளார். இரானி கோப்பை போட்டியின் முதல் நாளிலேயே ஷர்துல் தாக்கூர் உடல்நிலை பாதிக்கப்படுவதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது.
முதல் நாளில் லேசான காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பேட் செய்ததால், காய்ச்சல் அதிகரித்து உடல்நிலை மோசமானது. இதனால் போட்டியின் இடையில் இருமுறை அணியின் மருத்துவர் அவருக்கு சிகிச்சை அளித்தார்.
உடல் நிலை மோசமடைந்த போதிலும், மும்பை அணிக்காக தொடர்ந்து விளையாடி வந்த ஷர்துல் தாக்குரை, அணி நிர்வாகம் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றது. நேற்றிரவு முழுக்க மருத்துவமனையில் இருந்த ஷர்துல், மூன்றாம் நாள் ஆட்டத்தில் விளையாடுவது அவரது உடல்நிலை தேறுவதை பொருத்து முடிவு செய்யப்பட உள்ளது.
ஷர்துல் தாக்குருக்கு மலேரியா மற்றும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்குமா என்ற ரீதியில் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. தனது அணிக்காக மிகவும் கவனமாக விளையாடிய ஷர்துல் தாக்குர் 59 பந்துகளில் ஒரு சிக்சர், நான்கு பவுண்டரிகளை விளாசினார்.
தன்னுடன் ஆடிய சர்பராஸ் கான் அதிக ரன்களை குவிக்க வேண்டும் என்பதால், ஷர்துல் தாக்குர் தனது ஷாட்களை மிக கவனமாக தேர்வு செய்து அடித்தார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் சர்பராஸ் கான் 221 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
Cricket
தன் அணிக்கு அட்வைஸ் கேட்ட முன்னாள் வங்கதேச வீரர்.. மைக்கில் வைத்து பங்கம் செய்த சுனில் கவாஸ்கர்
கான்பூர் டெஸ்ட் போட்டியை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத அளவுக்கு இந்திய அணி சம்பவம் செய்தது. போட்டியின் போது கிட்டத்தட்ட இரண்டறை நாள் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டது. எனினும், எஞ்சியிருந்த கொஞ்ச நேரத்தில் இந்திய அணி துரிதமாக செயல்பட்டதோடு, போட்டியில் மிக துரிதமாக செயல்பட்டு வெற்றியை தட்டித்தூக்கியது. இந்த வெற்றி மூலம் இந்தியா வங்கதேசம் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
இந்தப் போட்டியின் நான்கு மற்றும் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட் அதுவரை பார்த்திராத சம்பவங்கள் பல அரங்கேறின. நான்காம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடங்கிய வங்கதேசம் அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் சவாலை ஏற்படுத்தினர். இதனால் அந்த அணி 233 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதன்பிறகு முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஜோடி, டெஸ்ட் போட்டியில் டி20 இன்னிங்ஸை ஆடியது. இதன் காரணமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக 50 ரன்கள், 100 ரன்கள், 150 ரன்கள், 200 ரன்கள் மற்றும் 250 ரன்களை அடித்த முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது.
இதைத் தொடர்ந்து நான்காம் நாளின் கடைசி செஷனில் 2-வது இன்னிங்ஸ் பேட் செய்ய வங்கதேசம் அணி களமிறங்கியது. அன்றைய நாள் ஆட்டம் முடிவதற்குள் வங்கதேசம் அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. ஐந்தாம் நாள் ஆட்டத்திலும் வங்கதேசம் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது போட்டியில் கமென்ட்ரி செய்து வந்த முன்னாள் வங்கதேச வீரர் அத்தர் அலி, இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரிடம் வங்கதேசம் பேட்டர்களுக்கு ஏதேம் அறிவுரை கூற விரும்புகின்றீர்களா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சுனில் கவாஸ்கர் கமென்ட்ரியில் வைத்து மைக்கில், “ஒரு இந்தியராக், அவர்களிடம் விரைவில் அவுட் ஆக சொல்வேன்,” என்று பதில் அளித்தார்.
பேட்டிங்கில் தடுமாறிய வங்கதேசம் வீரர்களுக்கு அறிவுரை கேட்டவருக்கு, சுனில் கவாஸ்கர் அளித்த பதில் அவர் மட்டுமின்றி அதனை கேட்ட அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. சுனில் கவாஸ்கரின் டைமிங் பதில் இந்திய ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
Cricket1 day ago
293 டெஸ்ட் போட்டிகளில் 24 முறை தான்.. புது வரலாறு படைத்த இந்தியா-வங்கதேசம்
-
Cricket1 day ago
ரேஸில் வென்ற ரோஹித் சர்மா!…சூப்பர் ஆக்கி காட்டுவாரா சூர்யா?…
-
Cricket1 day ago
ரவுண்டு கட்டி ஆடிய அஷ்வின்.. முத்தையா முரளிதரனின் நீண்ட கால சாதனையை சமன் செய்து அசத்தல்
-
Finance1 day ago
ஓரே நாளில் ஓரவஞ்சனை காட்டிய தங்கம்…மீண்டும் தலை தூக்கியுள்ள விலை உயர்வு…
-
india23 hours ago
மகாத்மா காந்தி பிறந்த நாள்…பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் மரியாதை…
-
Cricket5 hours ago
நிதானமாக ஆடிய ஷர்துல்.. அவுட் ஆனதும் மருத்துமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?
-
latest news3 hours ago
ரேஷன் கார்டுடன் மொபைல் நம்பர் லின்க் செய்வது இவ்வளவு ஈசியா?
-
Cricket1 day ago
92 ஆண்டுகளில் முதல் இந்திய வீரர்.. ஜெய்ஸ்வாலின் சூப்பர் சாதனை..!