யாராச்சு வேணும்னு அப்படி பண்ணுவாங்களா? களத்தில் ஜடேஜா கேள்விக்கு ஸ்டோக்ஸ் கொடுத்த ரியாக்ஷன்

இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதல் செஷனில் சுப்மன் கில் மற்றும் ரவீந்திர ஜடேஜா பேட்டிங் செய்தனர். அப்போது சுப்மன் கில் பிர்மிங்காமில் 150+ ரன்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். ஏழாவது வீரராக களமிறங்கிய ஜடேஜா இவருடன இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அப்போது போட்டியில் 87-வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா ரன் எடுக்க பிட்ச்-இன் நடுப்பகுதியில் ஓடினார். இதை கண்ட இங்கிலாந்து வீரர்கள் அவரிடம் இப்படி செய்யக்கூடாது என தெரிவித்தனர். மேலும், களத்தில் நின்றிருந்த அம்பயர் ஷர்ஃபுதுல்லாவும் ஜடேஜாவிடம் பேசினார். பிட்ச்-இன் நடுப்பகுதி பாதுகாக்கப்பட்ட அல்லது அபாயகரமான பகுதியாக கருதப்படுகிறது.

எனினும், இந்தப் பகுதியில் ஜடேஜா ஓடியதாக கூறப்படுகிறது. இதேபோல் போட்டியின் 89-வது ஓவரை வீசிய க்ரிஸ் வோக்ஸ் ஜடேஜா செயலுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிருப்தி தெரிவித்தார். அப்போது பேசிய ஜடேஜா, நான் ஏன் அப்படி செய்ய வேண்டும். நான் பேட்டிங்கில் மட்டும் தான் கவனம் செலுத்துகிறேன். பிட்ச்-இன் நடுவில் ஓடவில்லை என்றும் அருகில் இருக்கும் பகுதியில் தான் ஓடினேன் என்று கூறினார்.

போட்டியை பொருத்தவரை இந்திய அணி முதல் இன்னிங்கிஸ் 587 ரன்களை குவித்து ஆல்-அவுட் ஆனது. முதல் செஷனில் 310/5 என்ற கணக்கில் தொடங்கிய இந்திய அணிக்கு சுப்மன் கில் அதிகபட்சமாக 269 ரன்களையும், ஜடேஜா 89, ஜெய்ஸ்வால் 87 மற்றும் வாஷிங்டன் சுந்தர் 42 ரன்களை அடித்தனர்.

பின்னர் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 77 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினர்.

Leave a Comment