உஷார்.. வங்கிக் கணக்குகளுக்கு வலை விரிக்கும் கும்பல்.. கம்பி எண்ண வைத்த 5000 ரூபாய் ஆசை!

டிஜிட்டல் அரெஸ்ட்’ (Digital Arrest) மற்றும் போலி அதிகாரி மிரட்டல்கள் மூலம் அப்பாவி முதியவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பறிக்கும் மோசடி கும்பல் தற்போது புதிய உத்தியைக் கையாண்டு வருகிறது. நெல்லையில் ஒரு முதியவரிடம் ரூ.15 லட்சம் சுருட்டிய வழக்கில், வெறும் 5,000 ரூபாய்க்காக தனது வங்கிக் கணக்கை விற்ற புதுச்சேரி வாலிபர் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.

சதி வலை:
திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (72). இவர் மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) பணியாற்றி ஓய்வுபெற்றவர். கடந்த சில தினங்களுக்கு முன் இவரைத் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், தங்களை சிபிஐ (CBI) அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர்.

“உங்கள் பெயரில் உள்ள கணக்கு மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. உங்களைக் கைது செய்யப் போகிறோம்” என மிரட்டியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ரங்கநாதனிடம், வழக்கில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் பாதுகாப்பு வைப்புத் தொகையாகப் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறி, அவரிடமிருந்து சிறுகச் சிறுக ரூ.15 லட்சத்தைப் பறித்துள்ளனர்.

சிக்கியது எப்படி?
பணத்தை அனுப்பிய பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரங்கநாதன், நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீசார் பணப் பரிமாற்றம் நடந்த வங்கிக் கணக்குகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது, அந்தப் பணம் புதுச்சேரியைச் சேர்ந்த ஹென்றி ஜோன்ஸ் (35) என்பவரது வங்கிக் கணக்கிற்குச் சென்றது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக புதுச்சேரி விரைந்த போலீசார், அவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.

விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்:
கைது செய்யப்பட்ட ஹென்றி ஜோன்ஸிடம் நடத்திய விசாரணையில், அவர் ஆன்லைன் மோசடி கும்பலின் ஒரு கருவியாகச் செயல்பட்டது தெரியவந்தது.

விற்பனை செய்யப்பட்ட கணக்கு:
ஹென்றி ஜோன்ஸ் தனக்குச் சொந்தமான வங்கிக் கணக்கின் ஏடிஎம் கார்டு, செக் புக் மற்றும் ஆன்லைன் பேங்கிங் விபரங்களை வெறும் 5,000 ரூபாய்க்கு மோசடி கும்பலிடம் விற்றுள்ளார்.

வலை விரிக்கும் கும்பல்:
இவரைப் போன்ற பல ஏழைகள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களைக் கண்டறிந்து, அவர்களிடம் சில ஆயிரங்களைக் கொடுத்து அவர்களின் கணக்குகளைப் பெற்று, மோசடிப் பணத்தை இந்தக் கணக்குகள் மூலம் கிரிமினல்கள் மாற்றியுள்ளனர்.

போலீசார் எச்சரிக்கை:
“உங்கள் வங்கிக் கணக்கை யாருக்கும் வாடகைக்கோ அல்லது விற்பனைக்கோ கொடுக்காதீர்கள். அப்படிச் செய்தால், மோசடி கும்பல் செய்யும் ஒவ்வொரு குற்றத்திற்கும் நீங்களே முதல் குற்றவாளியாகக் கருதப்படுவீர்கள். வெறும் 5000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு, பல ஆண்டுகாலச் சிறைத் தண்டனையைத் தேடிக்கொள்ளாதீர்கள்” என நெல்லை சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

Leave a Comment