காசு கொடுத்தால் தான் லைவ் ஸ்டிரீமிங் செய்ய முடியும் – எக்ஸ் அறிவிப்பு

எக்ஸ் வலைதளத்தில் லைவ் ஸ்டிரீமிங் செய்ய கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மற்ற சமூக வலைதள நிறுவனங்கள் லைவ் ஸ்டிரீமிங் சேவையை இலவமாக வழங்கி வருகின்றன. இந்த நிலையில், எக்ஸ் நிறுவனம் லைவ் ஸ்டிரீமிங் அம்சத்திற்கு கட்டணம் வசூலிக்கும் முதல் நிறுவனமாக இருக்கும்.

முன்னதாக எக்ஸ் தளத்தின் அடிப்படை அம்சங்களை பயன்படுத்தவும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார். அந்த வகையில், இந்த அறிவிப்பு எவ்வித அதிர்ச்சியையும் ஏற்படுத்தாது. லைவ் ஸ்டிரீமிங் வசதிக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக அந்நிறுவனம் எக்ஸ் தள பதிவில் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான பதிவில், “விரைவில், பிரீமீயம் சந்தாதாரர்கள் மட்டுமே எக்ஸ் தளத்தில் லைவ் ஸ்டிரீமிங் செய்ய முடியும். இதில் எக்ஸ் தளத்தில் நேரடியாக லைவ் செய்வதும், எக்ஸ் இன்டகிரேஷன் கொண்டு என்கோடர் மூலம் லைவ் செய்வதும் அடங்கும்,” என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

புதிய அறிவிப்பு பற்றி எக்ஸ் நிறுவனம் மற்றும் அதன் சி.இ.ஓ. தரப்பில் இருந்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

லைவ் ஸ்டிரீமிங் அம்சத்திற்கு எப்போதில் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை. எக்ஸ் தளத்தில் வீடியோ ஃபர்ஸ்ட் தளமாக பயன்படுத்தி வருவோர் மத்தியில் இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

தலைசிறந்த யூசர் இண்டர்ஃபேஸ் மற்றும் வீடியோ பிளேயர் கொண்டுள்ள வலைதளங்களில்கூட இந்த அம்சத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இதனாலேயே புதிய கட்டண அறிவிப்புக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Comment