பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி இருக்கிறார். மேலும், மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பவர்களின் சிகிச்சை குறித்து அறிந்து கொண்டு அவர்களுக்கு நிவாரணமும் அறிவித்து இருக்கிறார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, கள்ளக்குறிச்சியில் நடந்தது மோசமான சம்பவம். கடந்த முறை மரக்காணத்தில் நடந்த போது முதல்வர் அதுவே கடைசி எனக் கூறினார். ஆனால் தற்போது பலி எண்ணிக்கை 40ஐ நெருங்கி இருக்கிறது. இதற்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவி விலக வேண்டும். இல்லை அதற்கான பொறுப்பை முதல்வராவது எடுத்து கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினை நேரில் சந்தித்தேன். அவர்கள் மோடி திட்டத்தில் வீடு, முத்ரா திட்டம் வேண்டும் எனக் கேட்டு இருக்கின்றனர். அரசாங்கத்தின் திட்டங்கள் அவர்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும். பாஜக கொடுக்கும் 1 லட்சம் மட்டுமல்லாது அவர்கள் வறுமையில் இருந்து மீளவும் பாஜக முயற்சி செய்யும்.
நேரில் சந்தித்த பின்னர் அறிக்கை கொடுக்க அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா கூறி இருந்தனர். அவர்களிடம் நான் கேட்க போவது சிபிஐ விசாரணை தான். ஏனெனில், கவலைக்கிடமாக இருக்கும் 15 பேரும் ஒரே நாளில் இல்லாமல் 3 முதல் 4 பாக்கெட்கள் அடுத்தடுத்த நாளில் குடித்து இருப்பதாக தெரிகிறது.
இதனால் இது ஒருநாளில் நடந்த சம்பவமாக பார்க்க முடியாது. ஒரு வீட்டை ஆராய்ந்த போது அங்கு கள்ளச்சாராயம் இருந்தது மட்டுமல்லாமல் திமுக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. திமுக அரசு தன்னுடைய தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுவிலக்கு வரும் என அறிவித்தது. ஆனால் தற்போது 20 சதவீத விற்பனை தான் அதிகரித்து இருக்கிறது.
உயிரிழந்தவர்களுக்காகவது மதிப்பு கொடுத்து உடனே 1000 மதுக்கடைகளை உடனே மூட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை முதல்வர் வந்து நேரில் விசாரிக்காமல் உதயநிதி ஸ்டாலினை அனுப்புவது எப்படி சரியாக இருக்கும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.




