டெண்டர் போட்டது திமுக ஆட்சியில, வட மாநிலத்தினரை வேலைக்கு சேர்த்தது திமுக ஆட்சியில.. எல்லாமே திமுக செஞ்சிட்டு, இப்ப கம்யூனிஸ்ட் பின்னாடி நின்னுகிட்டு தவெக ஆட்சி மேல பழி போடுறீங்களா? எங்க விர்ச்சுவல் வாரியர்ஸ் ஃபுல் டேட்டா எடுத்துட்டாங்க.. முன்னாடி மாதிரி மக்களை ஏமாத்தவும் முடியாது.. ஆட்சியாளர்களை ஏமாற்றவும் முடியாது.. உடனுக்குடன் பதிலடி கிடைக்கும்.. ஏன்னா இது எங்கள்தளபதியின் ஆட்சி…
தமிழகத்தில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 1,800 நடத்துநர்களை வெளிப்பணியாளர் முறையில் நியமித்தது தொடர்பாக திமுக தரப்பிலிருந்தும், சில ஊடகங்களிலிருந்தும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் திட்டமிட்ட அரசியல் திரிபு என்பது தற்போது ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது. தவெக அரசு வடமாநிலத்தவர்களைத் நேரடியாக நியமித்துவிட்டதாகக் கட்டமைக்கப்படும் பொய்ப்பிரச்சாரம், உண்மையில் திமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் என்பதைத் தேதிகளும் ஆவணங்களும் தெளிவாக உணர்த்துகின்றன. தங்களைச் சுதந்திரமான ஊடகங்களாகக் காட்டிக்கொள்ளும் சில ஊடகங்கள், உண்மையை மறைத்து ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவதைக் கண்டு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் தனியார் பணியாளர்களை ஈடுபடுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளி கடந்த 13.01.2026 அன்று வெளியிடப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் 17.02.2026 அன்று நிறைவடைந்த நிலையில், நிதி விண்ணப்பங்கள் 06.03.2026 அன்று திறக்கப்பட்டன. இந்த அனைத்து நிகழ்வுகளின் போதும் தமிழகத்தில் திமுகவின் ஆட்சியே நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்சியில் இருந்தபோது தாங்களே தொடங்கி வைத்த ஒரு நடைமுறையை, இன்று எதிர்க்கட்சியாக திமுக இருந்து கொண்டு தவெக அரசுதான் கொண்டு வந்தது என்று கூறுவது திமுகவின் அரசியல் திருட்டுத்தனத்திற்கு ஒரு சிறந்த உதாரணம் என்று அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த வெளிப்பணியாளர் முறை என்பது 2026-ல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல. ஏற்கனவே திமுக ஆட்சியில் கடந்த 2025-ம் ஆண்டிலேயே ஜூலை மாதத்தில் நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்களை மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் மூலம் ஈடுபடுத்துவதற்கான நடைமுறை கொண்டுவரப்பட்டது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி (எண்: 52/11652/PA2/MTC/2025) 25.07.2025 அன்று வெளியிடப்பட்டு, அதன் மூலம் சுமார் 2,000 பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தகைய பின்னணியை நன்கு அறிந்திருந்தும், திமுகவினர் அதைத் திட்டமிட்டு மறைத்து, தற்போது தவெக அரசின் மீது பழி சுமத்துவது வெட்கக்கேடான செயலாகும்.
தற்போதைய அரசு, திமுக ஆட்சியில் தொடங்கிய ஒப்பந்தப்புள்ளி நடைமுறையின் தொடர்ச்சியாகவே பணியாணைகளை வழங்கியுள்ளது. குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி எஸ்.எஸ். எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்குப் பணியாணை வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த ஒப்பந்தப்புள்ளி நடைமுறையைத் தற்போதைய அரசு ரத்து செய்தால், அது தேவையற்ற சட்டச் சிக்கல்களுக்கும், அரசுக்கு பெரும் அபராதத் தொகையைச் சுமத்தும் நிலைக்கும் வழிவகுக்கும். இந்தச் சட்ட ரீதியான நெருக்கடிகள் தெரிந்தே, திமுகவினர் பழைய ஒப்பந்தப்புள்ளிகளை மறைத்துவிட்டு, மக்களைத் தவறாக வழிநடத்த முற்படுகின்றனர்.
தேதிகளை மறைப்பதன் மூலமும், உண்மைகளைத் திரித்துச் சொல்வதன் மூலமும் மீண்டும் அரசியல் ஆதாயம் தேடலாம் என்ற திமுகவின் கனவு பலிக்காது என்பது உறுதி. ஆவணங்களையும், அரசாணைகளையும் யாராலும் மாற்றி எழுதிவிட முடியாது என்பதை அவர்கள் மறந்துவிட்டனர். ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது செய்த தவறுகளையும், கொண்டு வந்த நடைமுறைகளையும் இன்று எதிர்க்கட்சியாக இருந்து கொண்டே விமர்சிக்கும் இந்த இரட்டை வேடத்தை மக்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளனர். தங்களின் அரசியல் தோல்வியை மறைக்க, ஊடகங்களைப் பயன்படுத்திப் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்வது திமுகவின் வழக்கமான பாணியாக மாறிவிட்டது.
மொத்தத்தில், திமுக மற்றும் அதன் ஊதுகுழலாகச் செயல்படும் சில ஊடகங்களின் திட்டமிட்ட அரசியல் திரிபு, தவெக அரசுக்கு எதிரான ஒரு வன்மமான நகர்வே தவிர வேறொன்றுமில்லை. மக்கள் மத்தியில் நிலவும் குழப்பத்தைப் பயன்படுத்தி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற திமுகவின் தந்திரமான எண்ணம் மக்கள் முன்னால் தோலுரிக்கப்பட்டுள்ளது. ஆதாரங்களோடு உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்திருக்கும் நிலையில், இனிமேல் பொய்ப்பிரச்சாரங்கள் மூலம் அரசியல் செய்ய முற்படுவது திமுகவின் வீழ்ச்சியை வேகப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.