Cricket
51 பந்துகளில் 151 ரன்கள்… டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீரர்

ஐபிஎல் தொடரில் எந்த அணியும் இவரை ஏலத்தில் எடுக்கவில்லை. தற்போது மேஜர் கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடி வரும் நியூசிலாந்து வீரர் தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் திரும்பி பார்க்க செய்திருக்கிறார். நியூசிலாந்து அணியின் பின் ஆலென் சான் பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
அந்த வகையில், நேற்று நடைபெற்ற போட்டியில் வாஷிங்டன் ஃபிரீடம் அணிக்கு எதிராக களமிறங்கிய ஆலென் வெறும் 51 பந்துகளில் 151 ரன்களை விளாசினார். இவரது ஸ்டிரைக் ரேட் மட்டும் 296 ஆகும். இந்த இன்னிங்ஸில் மட்டும் இவர் 5 பவுண்டரிகள் மற்றும் 19 சிக்சர்களை அடித்துள்ளார்.
நேற்றைய போட்டியில் பின் ஆலெனின் அதிரடி ஆட்டம் காரணமாக அவர் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இவர் இந்த மைல்கல்லை வெறும் 49 பந்துகளில் எட்டினார். இவர் 34 பந்துகளில் சதம் அடித்த நிலையில், டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், இந்த தொடரில் அதிவேக சதம் அடித்த வீரராகவும் பின் ஆலென் சாதனை படைத்துள்ளார்.
இதுதவிர டி20 கிரிக்கெட்டின் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்சர்களை அடித்த வீரர்களில் கிறிஸ் கெயில் மற்றும் சாஹில் சௌஹான் ஆகியோரை ஆலென் முறியடித்துள்ளார். கிறிஸ் கெயில் மற்றும் சௌஹான் ஒரே இன்னிங்ஸில் 18 சிக்சர்களை அடித்துள்ள நிலையில், ஆலென் நேற்றைய இன்னிங்ஸில் 19 சிக்சர்களை அடித்துள்ளார்.
முன்னதாக 2025 ஐபிஎல் தொடரில் பங்கேற்க ரூ. 2 கோடி எனும் அடிப்படை விலையில் ஏலத்திற்கு வந்த பின் ஆலெனை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. ஏலத்தில் எடுக்கப்படாக வீரர் தற்போது அதிரடி ஆட்டம் ஆடியது ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் துறையை சார்ந்தவர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
